India

ரயிலில் ஒழுகிய மழை நீர்.. முதல் பயணத்திலேயே நடந்த சோகம்.. அடுத்த சர்ச்சையில் சிக்கிய வந்தே பாரத் ரயில் !

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போதே அந்த ரயில் விபத்துக்குள்ளானது.

அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் மீது மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து பசுமாடு அதன்படி கன்றுக்குட்டி மோதல் என வந்தே பாரத் ரயில் அடுத்தடுத்து சேதமடைந்தது. அதன்பின்னர் மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவை திறக்காமல் பயணிகள் அவதியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மோடி தற்போது கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்த பிறகு ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு கனமழை பெய்தது.

இந்த கனமழையில் வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் மழை நீர் ஒழுகியது. இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்த ஊழியர்கள் அதனை சரி செய்தனர். இது குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், ஏசி வென்ட் வழியாக மழை நீர் கசிந்துள்ளது என்றும் ஒரே ஒரு பெட்டியில் மட்டுமே இந்த பிரச்சினை இருந்தது என்றும் கூறியுள்ளனர். மேலும், ரயிலில் வேறு எந்த பழுதும் இல்லை என்றும் அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read: எருமை,பசுவைத் தொடர்ந்து கன்றுகுட்டி மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்.. தொடங்கிவைத்த ஒரே வாரத்தில் சோகம்!