India

எலியை கொன்றவர் மீது வழக்கு.. அதிரடி காட்டிய காவல்துறை.. 30 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்.. பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம், புடான் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் குமார். இவர் கடந்த நவம்பர் மாதம் தனது வீட்டில் இருந்த எலியை பிடித்து அதன் வாலில் கல்லைக் கட்டி வாய்க்காலில் வீசியுள்ளார். கல் கட்டிய காரணத்தால் வெளியே வரமுடியாத எலி இறந்துபோயுள்ளது.

இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்த்த விலங்கு ஆர்வலர் விக்கேந்திர ஷர்மா என்பவர் அந்த எலியை காப்பாற்ற முயன்ற நிலையிலும் அது இறந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்கேந்திர ஷர்மா எலியை கொன்ற மனோஜ் குமார் மீது மிருக வதைச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலிஸார் மனோஜ் குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது 30 பக்க அறிக்கையை உத்தர பிரதேச போலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக அந்த எலியின் சடலத்தை மீட்ட விலங்கு ஆர்வலர் விக்கேந்திர ஷர்மா அதனை கால்நடை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில், அதனை ஏற்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன்பின்னர் சடலம் பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (ஐவிஆர்ஐ) அனுப்பப்பட்டது.

அங்கு நடைபெற்ற பிரேத சோதனையில் எலி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து பேசிய குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் குமாரின் தந்தை "எலி போன்ற தீங்கு விளைவிக்கும் உயிரினங்களைக் கொல்வது தவறில்லை. எலி எங்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அதை என் மகன் கொன்றுள்ளார். அதற்கு நடவடிக்கை என்றால் எலிகளைக் கொல்லும் ரசாயனத்தை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆருத்ரா மோசடி : பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்டவர்கள்.. ஓட்டமெடுத்த பாஜக கேசவ விநாயகம் !