India

பாத்ரூமில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கை, கால்கள்.. மகளிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியடைந்த போலிஸ் !

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள லால்பாக் பகுதியை சேர்ந்தவர் வீணா ஜெயின். 53 வயதுடைய இவர் தனது 22 வயது ரிம்பிள் ஜெயின் என்ற மகளோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் வீணாவின் சகோதரர் மற்றும் உறவினர் காவல்துறையில் நேற்று (மார்ச் 14, 2023) புகார் அளித்தனர்.

அதில், தனது சகோதரி வீணா ஜெயினை காணவில்லை என்றும், இறுதியாக அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பார்த்ததாகவும், பின்னர் அவர் குறித்த எந்த தகவலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தங்கள் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து விசாரிக்கையில் வீணாவின் வீட்டுக்கு சென்று இன்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பாத்ரூமில் இருக்கும் கப் - போர்டு ஒன்றில் பிளாஸ்டிக் பைக்குள் அழுகிய நிலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வீட்டை சோதனை செய்ததில் மற்றொரு பெட்டிக்குள் துண்டாக்கப்ட்ட கை, கால்கள், எலும்புகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவை அனைத்தையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த உடல் வீணாவுடையது என்று நிரூபணமானது. இதையடுத்து வீட்டில் இருந்த வீணாவின் மகள் ரிம்பிள்தான் இந்த கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீஸ், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வீணாவை, ரிம்பிள்தான் கொலை செய்தார் என்று அவரே ஒப்புகொண்டுள்ளார். மேலும் அவரை கொலை செய்த ரிம்பிள், அவரது உடலை மறைக்க கட்டர், கத்தி, உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக்கியுள்ளார். அதோடு அதனை ஒரு பிளாஸ்டிக் பைகளில் தனித்தனியாக சுற்றி வீட்டிலுள்ள பாத்ரூமில் மறைத்து வைத்துள்ளார்.

இருப்பினும் வீணாவை கொலை செய்ததற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மும்பையில் தாயின் சடலம் துண்டுதுண்டாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 22 வயது மகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போல் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர், தனது காதலனால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு மற்றொரு பகுதியில் கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், தாயும் மகனும் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக்கி கொலை செய்து தூக்கி எறிந்த சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெறும் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கி.. இந்த மோசமான நிலைக்கு இதுதான் காரணமா?