India

நடுரோட்டில் பைக்கை எரித்த ஜூஸ் கடைக்காரர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த பொதுமக்கள்: புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பாஜக கூட்டணியுடன் நடைபெறும் இந்த ஆட்சியில் அவ்வப்போது முறைகேடு தொடர்பாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசு பொதுப்பணித் துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.4.47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இருப்பினும் தற்போது சாலை முழுமையாக சரிவர இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இந்த பணியில் முறைகேடு நடத்ததாக கரிக்கலாம்பாக்கம் - மடுகரை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளரும், சமூக ஆர்வலருமான தணிகாசலம் என்பவர் அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தார்.

இருப்பினும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த அவர், இது தொடர்பான தகவல்களை அறிய தகவல் உரிமைச் சட்டத்தை (RTI) நாடினார். இதையடுத்து இவர் கேட்டிருந்த தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு வந்துள்ளது. ஆனால் அந்த விளக்கம் அவருக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்து செல்ல முயன்றார்.

அதன்படி நேற்று காலை பொதுமக்கள் முன்னிலையில் கரிக்கலாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் தனது சொந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்த பெட்ரோலை அவரது வாகனத்தின் மீது ஊற்றி நெருப்பு பற்றவைத்தார். இதனால் அந்த வாகனம் எரிந்து நாசமாகியது. சாலையை சரிவர போடாத அரசை கண்டித்து தனது சொந்த வாகனத்துக்கு தீ வைத்து நபர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வாகனத்துக்கு தீ வைத்து போராட்டம் நடத்திய தணிகாசலனை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவர் தனது வாகனத்தை எரித்து போராட்டம் நடத்தியதை அங்கிருந்த பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தணிகாசலனை கைது செய்ததற்கு ஒரு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திருமணமான 2 மாதத்திலேயே நடந்த கொடூரம்.. கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்!