India

மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியதால் ஆத்திரம்.. குடும்பத்தையே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் !

மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த இளைஞர், மீண்டும் போதை மருந்தை உட்கொண்டு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே கொடூர முறையில் கொலை செய்துள்ளது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் கேசவ். 25 வயது இளைஞரான இவர், தனது பெற்றோர், தங்கை, பாட்டி என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீப காலமாக இவர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் தங்கள் மகனை முழுவதுமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்க குடும்பமே சேர்ந்து அவரை அந்த பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அண்மையில் இவர் அங்கிருந்து குணமாகி வெளியில் வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் ஒரு வேலைக்கும் சென்றுள்ளார்.

ஆனால் அந்த வேலையில் அவரால் நீடிக்க முடியவில்லை என்பதால் கடந்த மாதம் வேலையையும் விட்டுவிட்டார். அதோடு தீபாவளி பண்டிகையின் போதும் அவர் வேலை இல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் அவர் போதை பழக்கத்தை தொடங்கினார். எனவே மீண்டும் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கேசவ், நேற்று இரவு போதையில் இருந்தபோது, தனது பெற்றோரை சரமாரியாக அடித்துள்ளார். அதோடு அருகில் இருந்த கத்தியை எடுத்து அவர்களை குத்தி, அவர்களது கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார்.

மேலும் தனது பாட்டி மற்றும் சகோதரியையும் அதே முறையில் கொன்றுள்ளார். வீட்டில் அனைவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், போதையில் ஆக்ரோஷமாக இருந்த கேசவை கைது செய்தனர். மேலும் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "கேசவ் தனது குடும்பத்தை போதையில் கொடூரமாக கொன்றுள்ளார். இதில் அவரது தந்தை தினேஷ் (50), தாய் தர்ஷனா, பாட்டி தீவானா தேவி (75), தங்கை ஊர்வசி (18) ஆகியோர் சம்பவம் இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் பெற்றோர் கழிவறையிலும், பாட்டி, சகோதரி உடல் படுக்கை அறையிலும் கிடந்தது.

கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கேசவை அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 5 ஆண்டாக உருகி உருகி காதல்.. திருமணத்திற்குத் தடைபோட்ட பெற்றோர்: விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி!