India

இருசக்கர வாகனத்தின் சாவியை தர மறுத்த மகன்.. கோடாரி கொண்டு தந்தை செய்த வெறிச்செயல் !

மத்திய பிரதேச மாநிலம் டாமோவை சேர்ந்தவர் மோதி படேல் (வயது 51). இவருக்கு இரண்டு மகன்கள். இவரின் மூத்த மகன் ராம் கிசான், இளைய மகன் சந்தோஷ் படேல்.

இந்த நிலையில், மோதி பட்டேலும், ராம் கிசானும் வெளியே செல்வதற்காக சந்தோஷ் படேலிடம் இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு மறுத்த சந்தோஷ் படேல் இருசக்கர வாகனத்தின் சாவியை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் சந்தோஷ் படேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சந்தோஷ் படேலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சந்தோஷ் படேல் கீழே விழுந்துள்ளார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத சந்தோஷ் படேலின் தந்தை மோதி படேல் அங்கிருந்த கோடரியை எடுத்து தனது மகனின் இடது கையில் வெட்டியுள்ளார். இதில் சந்தோஷ் படேலின் கை துண்டாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தோஷ் படேலை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் படேல் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே துண்டான மகனின் கை, மற்றும் கோடாரியுடன் அருகிலிருந்த காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார். அவர் மேல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தந்தை மற்றும் மூத்த மகனை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: ரூ. 30 லட்ச மதிப்புள்ள தகடுகள் திருட்டு.. பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி உட்பட 4 பேர் கைது !