India

“பா.ஜ.க தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது” : தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல் காந்தி !

நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “குடியரசு தலைவர் உரை என்பது நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லை. அதற்கு மாறாக அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல் அறிக்கையாகவே உள்ளது. மோடி ஆட்சியில், இந்தியாக்கள் உள்ளன; பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என தற்போது நாடு இரண்டாக உள்ளது.

நாட்டில் உள்ள பணக்காரர்கள் செல்வமும் அதிகாரமும் மிக்கவராக உயர்ந்துள்ளனர். அதேவேளையில், 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவதாக ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில், புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்கவிட்டாலும், இருக்கிற வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பட்ஜெட்டில் செல்வந்தர்கள், பெருநிறுவனங்களுக்கும் கிடைத்த சலுகைகள் சிறு குறு தொழில்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் நசிந்துள்ளன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 55 கோடி மக்களை விட அதிகம் என்பதை ஏழை இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்நாட்டு மக்கள் எப்போதுமே அமைதியாக இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.

தேசம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் இல்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்றே இந்தியா நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்படுகிறது. பா.ஜ.க தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது. நீங்கள் என்ன கனவு கண்டாலும் சரி உங்களால் அதை சாதிக்கவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ராகுல் காந்தி உரையின் போது பா.ஜ.க-வினர் குறுக்கிட்டதால், அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: பெண்களுக்கு தொடரும் பாலியல் அத்துமீறல்.. ‘NO MEANS NO’ வசனத்தை பேசி கேள்வி எழுப்பிய எம்.எம்.அப்துல்லா!