India

“கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்” : பா.ஜ.க ஆளும் குஜராத்தில் அவலம்!

பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இந்துத்துவ மதவாத கும்பல் தொடந்து வன்முறையை கையாண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மதவாத கும்பலின் தாக்குதலில் பலர் படுகாயமடைவதோடு, உயிரையும் இழக்கின்றனர்.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களிலேயே பெரும்பாலும் இதுபோன்ற கும்பல் வன்முறைகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில், குஜராத்திலுள்ள ராமர் கோயில் ஒன்றில், தலித் குடும்பத்தினர், நுழைந்து விட்டார்கள் என்று கூறி, அவர்கள் மீது சாதிவெறியர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் காந்திதாம் கிராமத்தில் ராமர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு தலித் குடும்பம் ஒன்று வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளது. இதனை பார்த்த உள்ளூர் சாதிவெறியர்கள், அந்த குடும்பத்திலிருந்து வந்திருந்த 6 பேரையும் மிகமோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், கொடூரமான தாக்கு தலை நடத்தியுள்ளனர்.

தலித் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன், அவர்கள் வந்திருந்த ரிக்‌ஷா உள்ளிட்டவற்றையும் உடைத்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தலித் குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறை 20 பேர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருவதாக குஜராத் காவல் துறை தெரிவித்துள்ளது.

Also Read: “ஊழலில் மிதக்கும் பா.ஜ.க அரசு.. ரூ.300 கோடி பேரம்” : புயலைக் கிளப்பும் மேகாலயா ஆளுநர்!