India

லக்னோவில் படிக்கச் சொன்ன தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன் ஒரிரு நாளிலேயே பொய்த்துப்போன யோகியின் பேச்சு!

உத்தர பிரதேசத்தில் வன்முறைகளே இல்லை; குற்றச்சம்பவங்கள் குறைந்துவிட்டது என அம்மாநில பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில்தான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

ஆனால் நாட்டிலேயே வாழ்வதற்கு அபாயகரமான மாநிலமாக மக்களால் கருதப்படுவது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம்தான். யோகி ஆதித்யநாத்தின் உரை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் லக்னோவில் பெற்ற தந்தையை மகனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோவைச் சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ் என்கிற டின்கு. செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் அமன் யாதவ். வயது 19. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், காலை நடைபயிற்சிக்கு சென்ற அகிலேஷ், தனது மகன் சிலருடன் கடையில் நின்று பேசிக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறார். இதனையடுத்து படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அமன் யாதவை அவரது நண்பர்கள் முன்னிலையிலேயே அகிலேஷ் கடிந்திருக்கிறார்.

இதனால் அவமானப்பட்டதாக கருதி தந்தை அகிலேஷுக்கு முன்பே வீட்டிற்குச் சென்றிருக்கிறார் அமன். ஆத்திரம் தாளாத நிலையில், அகிலேஷ் வந்ததும் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தந்தை சுட்டுத் தள்ளியிருக்கிறார் அமன். இதனால் அகிலேஷின் தொடையில் ரத்தம் வழிந்தோடியதை கண்டு செய்வதறியாது திகைத்த அமன் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அகிலேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் தப்பியோடிய அமன் யாதவ் சின்ஹட் பகுதியில்தான் தஞ்சமடைந்திருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே அவனை கண்டுபிடிக்க அவர்களது உறவினர்களின் உதவியை நாடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: உ.பியில் வன்முறையே நடக்கலையா? அப்போ இதுலாம் என்னவாம்.. யோகி அரசை சரமாரியாக தாக்கிய நெட்டிசன்கள்!