India

“கணக்கு படிக்கவேண்டியது நீங்கள்தான்’: வீண்புகழுக்காக வதந்தி பரப்புவது மனநோய் - மதுவந்திக்கு ஒரு கோரிக்கை!

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தமிழர்களை தனது ‘அறிவுப்பூர்வமான’ பேச்சால் அவ்வப்போது அசரடித்து வருகிறார் இன்ஸ்டன்ட் சமூக - பொருளாதார - விஞ்ஞான - அரசியல் - வானியல் அறிஞர் ஒய்.ஜி.மதுவந்தி.

கொரோனா ஒருபக்கம் உலக மக்களை விழுங்கிக் கொண்டிருக்க, கொரோனா பரவலைத் தடுக்க மோடி அரசின் திட்டம் எனக் கூறி பொய் புரட்டுகளையும், அறிவியலுக்கு எதிரான தகவல்களையும் அள்ளி வீசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் மதுவந்தி.

கொரோனாவை விரட்ட ஒன்றிணைவோம் எனக் கூறி சமீபத்தில், அகல்விளக்கு மூலமும், டார்ச் மூலமும் ஒளியேற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார் இந்திய பிரதமர் மோடி. வழக்கம்போல், அவரது அறிவிப்பை விஞ்ஞானத்தோடு வீம்பாகக் கலந்துகட்டி வதந்திகளைப் பரப்பினர் பா.ஜ.க அபிமானிகள்.

இத்தகைய வதந்திகளில் உச்சம் தொட்டார் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான ஒய்.ஜி.மதுவந்தி. அவர், “9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றும்போது 9 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக வானியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதன் மூலம் கொரோனாவின் சக்தி குறையும்” என்றெல்லாம் இஷ்டம்போல் பேசினார்.

அவர் சொன்ன எதுவும் உண்மை அல்ல என்றும், மக்களை முட்டாளாக்கும் இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர். ஆனால், வதந்தி பரப்பினால் கைது என எச்சரிக்கும் காவல்துறை, உயர்மட்டத்தோடு தொடர்புடைய மதுவந்தி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மதுவந்தியின் மேலும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது. அதில் அவர் சொல்லும் தகவல்களுக்கு ஆதாரமாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டையும் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் மோடி செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் மதுவந்தி. இதைக் கேட்ட நெட்டிசன்கள் மூர்ச்சையடைந்துள்ளனர்.

இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. அவர் வழியிலேயே சென்றாலும், 8,000 கோடி பேருக்கு ரூ. 5,000 கோடியை பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 1 ரூபாய் கூட தர முடியாது.

அதுமட்டுமா, 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்கிறார். அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். மொத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையே 36.25 கோடிதான். இறுதியாக மோடியைப் புகழந்துரைக்கிறார். இடையிடையே, இவற்றைப் புரிந்துகொள்ள ஆங்கிலத்தைப் படிக்க வேறு சொல்கிறார்.

மதுவந்திக்கு ஒரு வேண்டுகோள் :

நாங்கள் ஆங்கிலம், கணக்கு எல்லாம் படித்துத் தேறிவிட்டோம். 30,000 கோடியில் 40% 20,000 கோடி, இந்திய மக்கள்தொகை 8,000 கோடி என்று ‘கொரோனா ஊரடங்கு’ காலத்தில் சாவகாசமாக அமர்ந்து வடை சுட்டுக் கொண்டிருக்காமல் கணக்கு வாய்ப்பாட்டையாவது படித்துவிட்டு வீடியோ வெளியிடுங்கள்.

Also Read: “உலகமே கொரோனாவுக்கு எதிராக இயங்கியபோது என்ன செய்தார் மோடி?” - மன்னிக்க முடியுமா? Part 1