India

பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்த மாணவர்கள் தற்கொலை : ஒரே ஆண்டில் 10,159 தற்கொலைகள் - NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரித்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி கடந்த காலங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட விவரங்களை தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “2009 ஜனவரி 1ம் தேதி முதல், 2018 டிசம்பர் 31ம் தேதி வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டு மட்டும் 10,159 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதில் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் நாட்டிலேயே அதிக மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட முதல் 3 மாநிலங்கள் பட்டியலில் 1,448 மாணவர்கள் தற்கொலைகளுடன் மகாராஷ்டிரா , 953 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.

இதேபோல், 862 தற்கொலை சம்பவங்களுடன் மத்திய பிரதேசம் 3வது இடத்திலும், 755 தற்கொலைகள் நிகழ்ந்துள்ள கர்நாடகா 4வது இடத்திலும், 609 தற்கொலைகளோடு மேற்குவங்கம் 5வது இடத்திலும் உள்ளன.

அதுமட்டுமின்றி, கடந்த 2018-ம் ஆண்டில் நாடுமுழுவதும் சுமார் 1.3 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 8 சதவீதம் பேர் விவசாயிகள் என்றும் 10 சதவீதம் பேர் வேலையில்லாமல் தற்கொலை செய்துக்கொண்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலோனோர் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடும்ப சூழல், மனஅழுத்தம், பயம், போதைப் பொருட்கள் ஆகிய காரணங்களுக்காகவும் மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “மோடி ஆட்சியில் அதிகரித்த விவசாயிகள் தற்கொலை” : ஒருவருடத்தில் மட்டும் 10,349 பேர் தற்கொலை! - #NCRBReport