India

30,000 கோடி ரூபாய் நஷ்டம் : Rcom இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகிய அனில் அம்பானி - சிக்கலில் ரிலையன்ஸ்?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களிலும் லாபத்தை சம்பாதித்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவரது சகோதரர் அனில் அம்பானியின் தலைமையின் கீழ் இருக்கும் அனில் திருபாய் அம்பானி குழும தொழில்கள் அனைத்தும் சமீபகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை அமைப்பாக செயல்படும் ஜி.சி.எக்ஸ் - GCX நிறுவனம் முற்றிலுமாக திவாலானது.

அதிலும் குறிப்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் அடையும் நிலைக்கு சென்றதால், அந்நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கடந்த அக்டோபரில் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் பொறுப்பில் இருந்து வி.மணிகண்டன் பதவி விலகினர்.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்பட்டு வந்த சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி கக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் தனது பதவியில் இருந்து வெளியேரியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 366 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது காலாண்டில் 30,158 கோடி ரூபாயாக இழப்பு ஏற்பட்டது. அதனால் தான் இந்த முடிவை அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேரும் எடுத்துள்ளன என கூறப்படுகிறது.

Also Read: திவால் ஆகும் அனில் அம்பானியின் இன்னொரு நிறுவனம் : 9 ஆயிரம் கோடி கடனை கட்டி காப்பாற்றுவாரா அண்ணன் முகேஷ்?

அனில் அம்பானி திரும்பும் இடமெல்லாம் தொடர்ந்து தோல்வி, முகேஷ் அம்பானியும் உதவிக்கு முன்வராததால் முதலீட்டாளர்களிடம் இருந்து நெருக்கடியையும் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து அனில் அம்பானி வருகிறார்.

இந்த பாதிப்பு அனில் அம்பானிக்கு மட்டும் இல்லை, இவரை நம்பி பல லட்சம் கோடிகளை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும், அவரின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தான் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும், இந்தியத் தொலைத்தொடர்புத்துறை கடும் சரிவைச் சந்தித்து வருவதாகவும் இப்படியே போனாலும் நிலைமை மோசமடையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: திவாலானது அனில் அம்பானியின் ‘GCX’ நிறுவனம் - முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? உண்மை என்ன?