India

மக்களவை இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க எம்.பி வீரேந்திர குமார் நியமணம்!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங் களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதையடுத்து, மே மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்றது.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 17ல் துவங்குகிறது. முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பி.,க்கள் பொறுப்பேற்றுக் கொள்வர். 19ல், சபாநாயகர் தேர்வு நடக்கிறது. மறுநாள், பார்லிமென்டின், இரு சபைகளின் கூட்டத்தில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அடுத்த மாதம், 26 வரை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த தொடரில், ஜூலை 5ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்தநிலையில் புதிய மக்களவைக்கு இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து வீரேந்திர குமார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

பா.ஜ.க சார்பில் 7 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அவர், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.