Election 2024

“மோடிக்கு சமைத்துக்கொடுக்க நான் தயார்...” - உணவு அரசியலுக்கு குட்டு வைத்த மம்தா பானர்ஜி !

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நவராத்ரி பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இந்த சமயத்தில் பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை பாஜகவினர் பலரும் விமர்சித்து வந்தனர். மேலும் இந்து பண்டிகையன்று அசைவ உணவை சாப்பிடுவதாக கூறி உணவு அரசியலையும் மேற்கொண்டனர்.

இதனை மோடி தனது பிரசராத்திலும் பயன்படுத்தினார். தேஜஸ்வியை தொடர்ந்து பிரபல ஊடகவியலாளர் ராஜதீப் சர்தேசாயும் தனது ட்விட்டர் பக்கத்தில் மீன் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். இதற்கும் பாஜகவினர் விமர்சித்து பதிவை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தேர்தல் தனது தட்டில் இல்லை என்றும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்றால் அங்கிருக்கும் உணவு பழக்கம் மாறுபடும் என்றும் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் மோடியின் உணவு அரசியல் பிரசாரத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். கலாச்சாரங்கள், மாறுபட்ட வழக்கங்கள், வேறுபட்ட மொழிகளை கொண்டது. மக்கள் விரும்பினால் சைவம், அசைவம் என எதையும் சாப்பிடலாம். இது அவரவர் தனிப்பட்ட உரிமை.

பல மாநிலங்களின் உணவு வகைகளை நான் சாப்பிட்டிருக்கிறேன். உணவு முறைகளில் எந்த பாகுபாடும் கிடையாது. எனக்கு சிறுவயதில் இருந்தே சமைக்க தெரியும். எனது சமையலை பலரும் பாராட்டியுள்ளனர். பிரதமர் மோடி விரும்பினால் நான் அவருக்கு பிடித்ததை சமைத்துக் கொடுக்க தயார். ஆனால் அதை அவர் சாப்பிடுவாரா?" என்று பேசி மோடியின் உணவு அரசியலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read: மோடிக்கு எதிராக 55 பேர் வேட்பு மனுத்தாக்கல்... நிராகரித்த தேர்தல் ஆணையம் - குவியும் கண்டனம்!