Election 2024

”இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களின் கனவு நனவாகும்” : ராகுல்காந்தி உறுதி!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இளைஞர்களுக்காக காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், அவர்களின் தலைவிதியை மாற்றவுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "இந்திய நாட்டு இளைஞர்களின் தலைவிதியை மாற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் 5 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு ஒன்றிய அரசுத்துறைகளில் உள்ள 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பட்டதாரிகளுக்கும், டிப்ளோமா படித்தவர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்படும்.

வினாத்தாள் கசிவு இல்லாமல் அரசு தேர்வுகள் அனைத்தும் நேர்மையாக நடத்தப்படும். பென்ஷன் திட்டங்களுக்கு சமூக பாதுகாப்பு, தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் கடனுதவி உள்ளிட்டவை நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இளைஞர்களின் கனவு நனவாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: ”காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்?” : ப.சிதம்பரம் கேள்வி!