Election 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையில் எடுத்துச் சென்ற அதிகாரிகள் - பாஜக ஆளும் உ.பி-யில் ஷாக் !

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (07.05.2024) 3-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு நடைபெற்றது. வட மாநிலங்களில் நடைபெறும் ஒவ்வொரு வாக்குப்பதிவின்போதும், பாஜக எதையாவது கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று உத்தர பிரதேச மாநிலத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசாரை விட்டு, இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்த விடாமல் தடுத்துள்ளது பாஜக அரசு.

மேலும் இஸ்லாமியர்கள் மீது போலீசார் கடுமையாக தடியடி நடத்தினர். வயதானவர்கள் என்றும் பாராமல் போலீசார் நடத்திய தடியடியால் அங்கிருந்த மக்கள் கடுமையாக காயமுற்றனர். மேலும் ஒரு பகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரையும் போலீசார் அழைத்து சென்றனர். இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே பாஜக அரசு இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மயின்பூரி நாடாளுமன்ற தொகுதியில் கிஷானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தர்மாநேர் என்ற இடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சூழலில் வாக்குப்பதிவுக்கு பிறகு, அதிகாரிகள் அந்த வாக்கு இயந்திரத்தை தங்கள் கைகளால் எடுத்துக் கொண்டு நடந்து சென்றனர். அதிகாரிகளுக்கு என்று தனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் இருந்துள்ளாதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாக்கு இயந்திரத்தை கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு வாகனம் கொடுக்காதது, வேண்டுமென்றே நிகழ்ந்த செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், மெயின் பூரி தொகுதியானது சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் ஆதரவு உள்ள பகுதியாகும். எனவே வாக்கு இயந்திரங்களை, அதிகாரிகள் கொண்டு செல்லும் வழியில் எதாவது ஒரு தில்லுமுல்லு ஏற்படுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். இதனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக பலரும் சந்தேகிக்கின்றனர். இந்த நிகழ்வுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு : அடுத்தடுத்து சிக்கும் பாஜக நிர்வாகிகள் !