Election 2024

பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி முன்னேற்றம் என பல வாக்குறுதிகளை கொடுத்து, அதனை 'ஜூம்லா'-வாக செய்து வருகிறது பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக பல திட்டங்களை அறிவித்தது.

அதில் ஒன்றுதான், 3 வேளாண் சட்டம். இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். எனினும் அதனை கண்டுகொள்ளாத பாஜக அரசு, அவர்கள் மீது வன்முறையை ஏவியது. விவசாயிகளுக்கு முறையான விளைப் பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

விவசாயிகள் தற்கொலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கடனை தள்ளுபடி செய்யாமல், பெரிய தொழிலதிபர்களின் கோடி கணக்கிலான கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. அண்மையில் கூட குறைந்தபட்ச ஆதார விலையை கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டனர்.

அப்போது பாஜக அரசின் பேச்சை கேட்டு, போலிசார் நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். எனினும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விடாமல் தொடர்ந்து வந்த நிலையில், பாஜக அரசு அதனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தவிர்த்துக்கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக பாஜக வேட்பாளர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக விவசாயிகள் அதிகமாக போராட்டம் நடத்தும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாஜகவுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரணீத்கவுர், ராஜ்புரா பகுதியில் பிரசாரத்துக்கு சென்றார்.

அப்போது அவருக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டனர். இதனால் பாஜகவினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளுவில் சுரேந்திரபால் சிங் (45) என்ற விவசாயி சட்டென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட சக விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜகவினருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. தற்போது உயிரிழந்த விவசாயிக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !