Election 2024

ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த இரண்டு தேர்தலும் ஒரே கட்டமாக மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி, பா.ஜ.க கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

25 மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பா.ஜ.க 6, ஜனசேனா கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல், 175 சட்டமன்றத் தொகுதிகளில் 144 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுகிறது. மேலும் பா.ஜ.க 10 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும் போட்டியிடுகிறது.

நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் படங்கள் இடம் பெற்று இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை. இது பா.ஜ.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரதமர் மோடி ஆந்திராவில் பிரச்சாரம் செய்தபோது, ”இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என கூறினார். இதற்கு தற்போது தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ”இஸ்லாமியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது. 4% இட ஒதுக்கீடு தொடரும்” எனவும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதனால் பா.ஜ.க - தெலுங்கு தேசம் கட்சி கூட்டணிக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read: ”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!