DMK

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகவே தமிழக மக்கள் எண்ணுகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் MKS அகாடமி என்ற வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதனை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆளுங்கட்சி செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் நம் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழக மக்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகவே எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறுவதற்கான முன்னோட்டம்தான் உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதற்கான பதில் வரும்.

வேலை வாய்ப்பை அமைத்துக் கொடுத்து வேலை வாய்ப்பிற்கான தகுதிகளை வளர்க்கக்கூடிய இந்த பயிற்சி மையங்கள் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. தலைவரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் தொடங்க வேண்டும் என்ற ஆணைக்கிணங்க இதுபோன்ற பயிற்சி மையங்களை அமைத்து வருவதற்கு நன்றி.

ஆயிரம்விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் அவர்கள் தலைமையில் தொடங்கிய இந்த பயிற்சி மையத்தினால் பல்லாயிரம் பேர் பயன்பெற வேண்டும். 67 வயதானாலும் கு.க.செல்வம், குழந்தைத்தனம் மாறாமல் வெள்ளந்தியான மனிதராக உள்ளார். மென்மேலும் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்ய வேண்டும்.” எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், எம்.கே.மோகன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Also Read: மத்திய பட்ஜெட் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கானது - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!