Cinema

"சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தது தவறுதான், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - காவல்துறைக்கு வந்த மெசேஜ்!

மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலைக்கு பின்புறம் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாபா சித்திக்கின் நெருங்கிய நண்பரான நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது

மும்பை போக்குவரத்து காவல் துறையின் வாட்ஸ் ஆப் நம்பருக்கு வந்த மிரட்டலில் "சல்மான் கான் உடனே 5 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில், பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை அவருக்கு ஏற்படும். இந்த செய்தியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்." என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Salman khan and baba siddique

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்துத் தவறு செய்துவிட்டேன் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் முன்னர் மிரட்டல் வந்த அதே மொபைல் எண்ணில் இருந்து மீண்டும் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மெசேஜ் வந்த எண் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்துள்ளதாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்ய மும்பையிலிருந்து தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.