Cinema

அவதூறு... பிரபல இயக்குநர் மோகன் ஜீ சென்னையில் கைது செய்த திருச்சி போலீஸ் - காரணம் என்ன ?

அண்மையில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரத்தை தொடர்ந்து அதே திருப்பதி லட்டுவில் குட்கா இருப்பதாகவும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த லட்டு விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்ப முயன்று வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் கொள்முதல் செய்த நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் கொள்முதல் செய்வதாக பாஜகவை சேர்ந்த சிலர் அவதூறு பரப்பினர். ஆனால் இந்த போலியான தகவலை தமிழ்நாடு அரசு முற்றிலும் மறுத்துள்ளது.

மேலும் பழனி பஞ்சாமிர்த தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுவதாகவும், எனவே, பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இது குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், வர்த்தகப் பிரிவு நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவதூறு பரப்புபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் ஜீ, பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தனியார் செய்தி சமூக ஊடகத்தில் பேசிய மோகன் ஜீ, பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலப்பதாக தெரிவித்தார்.

இந்த அவதூறு விவகாரத்திற்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், சென்னை, இராயபுரத்தில் அவரது இல்லத்தில் வைத்து இயக்குநர் மோகன் ஜீயை திருச்சி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன் ஜீ, திருச்சிக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: மகாராஜா முதல் ஜமா வரை... Oscar-க்கு பரிந்துரை செய்யப்பட்ட அந்த 6 தமிழ் படங்கள் - பட்டியல் இதோ !