Cinema

சினிமா முதல் சீரியல் வரை... பிரபல பழம்பெரும் நடிகை CID சகுந்தலா மறைவு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !

முற்காலத்தில் வெளியான திரைப்படங்களில் மிகக்குறைவான நடிகைகளே இருப்பர். அதில் முக்கியமானவர்தான் CID சகுந்தலா. சேலத்தை பூர்வீகமாக கொண்ட சகுந்தலா, தனது 20 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். முன்னதாக சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார்.

அப்போது கிடைத்த அறிமுகங்கள் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். 1970-ம் ஆண்டு வெளியான தனது இரண்டாவது படத்தில் ஜெய்சங்கரின் ‘CID சங்கர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் CID சகுந்தலா என்று அறியப்பட்டார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் என முன்னனி நடிகர்களுடன் நடித்தார். குறிப்பாக சிறப்பு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

‘வசந்த மாளிகை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘படிக்காத மேதை’, ‘நான் வாழவைப்பேன்’ என தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து 1998-ம் ஆண்டு வரை வெள்ளித்திரையில் ஒளித்த இவர், பிறகு அதில் இருந்து விடைபெற்று சின்னத்திரையில் ஒளிர தொடங்கினார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொந்தம்’, ‘குடும்பம்’, ‘கஸ்தூரி’, ‘கல்யாணப் பரிசு’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். இறுதியாக 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தமிழ் செல்வி’ என்ற தொடரில் நடித்து வந்த இவர், அதன்பிறகு வயது முதிர்வு காரணமாக சினிமா, சீரியல் என அனைத்திலிருந்தும் விலகிய சகுந்தலா, பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று (செப்.17) சகுந்தலாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்று சகுந்தலா உயிரிழந்தார். தனது 84-வது வயதில் உயிரிழந்த பழம்பெரும் நடிகை CID சகுந்தலாவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு : டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு - நடந்தது என்ன?