Cinema

குடிபோதையில் சிறுவன் மீது தாக்குதல்... பாடகர் மனோவின் மகன்கள் மீது பாய்ந்த வழக்கு - நடந்தது என்ன ?

சென்னை மதுரவாயிலையடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன். 3-ம் ஆண்டு கல்லூரி படித்து வரும் இவரும், அதே பகுதியை சேர்ந்த ஐடிஐ படிக்கும் 16 வயது சிறுவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி இவர்கள் வழக்கம்போல் சம்பவத்தன்றும் கால்பந்து விளையாட்டு பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

இந்த சூழலில் பயிற்சி முடித்துவிட்டு உணவகத்தில் உணவு வாங்குவதற்காக அதே பகுதியில் இருக்கும் பிரபல பின்னணி பாடகர் மனோ வீட்டின் வழியாக கிருபாகரன் மற்றும் அந்த சிறுவன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் உட்பட 5 பேர், கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனை அழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும அவர்கள் இருவரையும் அருவருக்கத்தக்க வகையில் பேசி, இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கிருபாகரனுக்கு பின் தலையில் கடும் காயமும், சிறுவனுக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தங்கள் காயங்களுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர்கள், இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில் பாடகர் மனோவின் மகன்களான சாகிர், ரஃபி, இவரது நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகிய 4 பேர் மீதும் கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விக்னேஷ், தர்மா ஆகியோரை கைது செய்துள்ள போலீஸார், தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பாடகர் மனோவின் மகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: 16 நிறுவனங்கள் : ரூ.7016 கோடிக்கு முதலீடுகள் : முதலீட்டிலும் முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின்!