Cinema

IC814 விமான கடத்தல்.. “அன்புள்ள தங்கைக்கு..” : இந்திய பெண்ணுக்கு பரிசு வழங்கிய பயங்கரவாதி - விவரம் என்ன ?

அண்மைக்காலமாக உண்மை சம்பவத்தை தழுவிய படங்கள் வெளியாவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு IB71 என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. விமானம் கடத்தல் தொடர்பான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம், இந்திய விமான படை அதிகாரிகள் மாறு வேடத்தில் பிற நாட்டுக்குள் நுழைந்து, போரை தடுக்க முயன்றது குறித்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது IC814 என்ற சீரிஸ் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படமும் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட நிலையில், சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இந்த சீரிஸில் இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் Netflix தளத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

IC 814 என்ற விமானம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். இந்த விமானம் கடந்த 1999-ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்டபோது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் முடக்கினர். மேலும் அதனை ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர்.இந்த விமானத்தில் பயணித்த 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களும் பயங்கரவாதிகள் பிடியில் இருந்தனர்.

விமானத்தை கடத்திய 5 பேர் கொண்ட பயங்கரவாதிகள், இந்தியாவில் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த முஷ்டாக் அகமது சர்கார், அகமது ஒமர் சையது ஷேக் மற்றும் மௌலானா மசூத் அசார் ஆகிய 3 பயங்கரவாதிகளை விடுவிக்கும்படி நிபந்தனைகள் விதித்தனர். சுமார் 7 நாட்கள் வரை விமானத்தை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தொடர்ந்து இந்திய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த பாஜக (வாஜ்பாய்) தலைமையிலான ஒன்றிய அரசு அந்த 3 பயங்கரவாதிகளையும் விடிவித்தனர். இதையடுத்தே அந்த பயங்கரவாதிகள் IC 814 விமானத்தை பயணிகளோடு ஒப்படைத்தனர். ஆனால் இந்த சம்பவத்தின்போது 17 பயணிகள் காயமடைந்தனர். ரூபின் காட்யால் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இந்த விவகாரத்தின் உண்மை சம்பவத்தை தழுவி IC 814 எனும் வெப் தொடர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.29-ம் தேதி Netflix தளத்தில் வெளியான இந்த தொடரில், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, விஜய் வர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 6 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில், விமானத்தை கடத்தும் பயங்கரவாதிகளுக்கு போலா, சங்கர் போன்ற இந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதாக பாஜக நிர்வாகி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு Netflix-ன் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விமானத்தை கடத்திய 5 பயங்கரவாதிகளும் தங்களுக்குள் Chief, டாக்டர், பர்கர், போலா, சங்கர் என்று code பெயர்களை பயன்படுத்தி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

ஒன்றிய அமைச்சகத்தின் நோட்டீஸுக்கு பிறகு Netflix தலைவர் மோனிகா இந்த விவகாரத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்ட இந்த தொடரில் பயங்கரவாதிகள் ஹிந்துக்களின் பெயர்களை Code வார்த்தையாக பயன்படுத்தியதாகவும், யாரையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த தொடரின் தொடக்கத்தில் 5 பயங்கரவாதிகளின் உண்மை பெயர்களை Netflix சேர்த்துள்ளது. இப்ராஹிம் அதர், சன்னி அகமது காசி, ஜஹூர் இப்ராஹிம், ஷாஹித் அக்தர் மற்றும் சயீத் ஷகிர் ஆகிய 5 பேரும் உண்மையான பயங்கரவாதிகள் ஆவர்.

இப்படி இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது அந்த விமான கடத்தலின்போது இருந்த ஒரு தம்பதியின் தனியார் ஊடகம் பேட்டியெடுத்துள்ளது. அதில் அந்த கடத்தல் பயங்கரவாதிகளில் ஒருவர் "அன்புள்ள தங்கைக்கு..." என்று அவரது துணி ஒன்றில் எழுதி கொடுத்தது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராகேஷ் - பூஜா கட்டாரியா என்ற தம்பதி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1999-ம் ஆண்டு நேபாளில் தேனிலவு முடித்து மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக IC 814 விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது இந்த விமான கடத்தல் நிகழ்வு நடந்துள்ளது.

இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், "நாங்கள் மீண்டும் அந்த சோதனையை மீட்டெடுக்க விரும்பவில்லை. எனவே அந்த சீரிஸை பார்க்க விரும்பவில்லை. நெட்ஃபிக்ஸ் தொடரில் குறிப்பிட்டுள்ளது உண்மைதான். அந்த பயங்கரவாதிகள் தங்களுக்குள் போலோ, சங்கர் உள்ளிட்ட பெயர்களையே பயன்படுத்தினர். நெட்ஃபிக்ஸ் தொடரில் நீங்கள் பார்ப்பதை நாங்கள் உண்மையில் கடந்து வந்திருக்கிறோம்.

இந்த தொடரைப் பார்ப்பது 25 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய காயங்களை மீண்டும் திறப்பது போல் உள்ளது. அந்த பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்ததும் எங்களை குனிந்துகொள்ளும்படி கூறினர். நாங்கள் அனைவரும் மிகவும் பதற்றமடைந்தோம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை. அவர்கள் ஏதாவது பணம் கேட்டு நிபந்தனை வைத்து எங்களை உடனடியாக விடுவித்துவிடுவர் என்று எண்ணினோம்.

ஆனால் நாங்கள் யாரும் எதிர்பாராத வகையில், அந்த நேரம் மிகவும் கடினமாக இருந்தது. இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே இருந்ததால், அங்கிருந்து நாங்கள் உயிருடன் செல்வோம் என்ற நம்பிக்கை குறைய தொடங்கியது. டிசம்பர் 30-ம் தேதி 'நாங்கள் இப்போது உங்களைக் கொல்லத் தொடங்க வேண்டும்; உங்கள் விடுதலைக்காக உங்கள் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை' என்று தெரிவித்தனர். இதனை கேட்டு அனைவரும் பெரும் பதற்றத்துக்கு உள்ளானோம். ஒரு வழியாக அங்கிருந்து வந்துவிட்டோம்." என்றனர்.

பேட்டியின்போது, , "எனது அன்பான சகோதரி மற்றும் அவரது அழகான கணவருக்கு..." என்று அன்றைய தேதியோடு 'பர்கர்' என்ற பயங்கரவாதி எழுதி, அவரது ஆட்டோகிராப் செய்யப்பட்ட சால்வையை அந்த தம்பதி வெளிப்படுத்தினர். தற்போது இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also Read: ரஷ்ய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. புதினை கைது செய்ய மறுத்த மங்கோலியா : பின்னணி என்ன ?