Cinema

‘பிகில்’ திரைப்படத்தின் கதை திருட்டு வழக்கு : அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு !

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'பிகில்'. அட்லீ இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, அமிர்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறி அம்ஜத் மீரான் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி அம்ஜத் மீரான் கடந்த 2023-ல் மூன்று மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அதன் செயல் இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சத்தை வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி நிபந்தனை விதித்திருந்தார்.

ஆனால் அதனை அம்ஜத் மீரான் வழங்காத நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் தரப்பில் உரிய கால அவகாசத்தை தாண்டி 73 நாட்கள் காலதாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக 'பிகில்' படத்தின் இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Also Read: திரையுலகை உலுக்கும் பாலியல் புகார் : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 7 தீர்மானங்கள் என்ன?