Cinema

பொது மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலையா... ரசிகர்கள் கண்டனம்... பின்னணி என்ன?

பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான் 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி' (Gangs of Godavari). விஷவாக் சென், நாசர், அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) கலந்துகொண்டார்.

இந்த சூழலில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பாலையா, நடிகை அஞ்சலியை மேடையில் வைத்து தள்ளி விட்டுள்ளார். அதாவது படக்குழுவினர் மேடையில் நின்று பத்திரிகையாளர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த பாலையா, தான் நடுவில் நிற்பதற்காக நடிகை அஞ்சலி மற்றும் நேஹா ஷெட்டியை தள்ளி நிற்க கூறியுள்ளார்.

அதன்படி அஞ்சலியும் சற்று நகரவே, அவரை மேலும் நகருமாறு கூறிக்கொண்டே தள்ளிவிட்டார் பாலையா. பிறகு எரிச்சலோடு அவர் ஏதோ ஒன்று கூற, அஞ்சலியும் அதனை கிண்டலாக எடுத்துக்கொண்டு சிரித்துள்ளார். தற்போது அனைவர் முன்பும் பாலையா, நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு தற்போது ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, சில திரை பிரபலங்களும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். பாலையாவின் இந்த நடவடிக்கை பலமுறை நடந்துள்ளது என்றும், இதுவே அவருக்கு வேலை என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது டோலிவுட் (தெலுங்கு சினிமா) வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”இவர் இயக்கினால் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பேன்” : நடிகர் சத்தியராஜ்