Cinema

Fighter : “90% இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததில்லை” -படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் சர்ச்சை பேட்டி!

ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் 'ஃபைட்டர்' (Fighter). சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஜன. 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனால் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, பாலிவுட்டில் பாக்ஸ் ஆஃபீஸ் மிகவும் சரிவு நிலையிலேயே காணப்பட்டது. குறிப்பாக பெரிய பெரிய ஸ்டார் படங்கள் கூட வசூல் ரீதியாக மிகவும் தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் பாலிவுட் சினிமா மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் இதனை முறியடித்து மீண்டும் பாலிவுட் சினிமாவை தூக்கி நிறுத்தியது. இதைத்தொடர்ந்து வெளியான ஜவான், ராக்கி அவர் ராணி கி பிரேம் கஹானி, டைகர் 3 உள்ளிட்ட சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து, பாலிவுட் சினிமா மேலும் நிலைநிறுத்தியது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான நிலையில், அதில் அனிமல் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைத்திருந்தாலும், தற்போது Fighter திரைப்படம் சரிவையே சந்தித்துள்ளது. இந்த படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில், வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், விமானம் சார்ந்த விஷயங்கள் பேசப்பட்டிருக்கும் இந்த படமானது, இந்திய மக்கள் பெரும்பாலும் விமானத்தில் சென்றதில்லை என்பதால், மக்கள் மத்தியில் வரவேற்கப்படவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்மையில் Youtube சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.

அந்த பேட்டியில், “Fighter ஒரு பெரிய பாய்ச்சல். திரைப்பட இயக்குநர்கள் இதே போல் பல படங்களை இயக்க வேண்டும். இது மக்களுக்கு முற்றிலும் புதியது. பார்வையாளர்களுக்கு எந்த குறிப்பும் இல்லை, அதாவது அவர்கள் பார்ப்பது கொஞ்சம். 90% இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததில்லை. இன்னும் பலர் விமான நிலையத்திற்கு கூட சென்றதில்லை. பிறகு எப்படி அவர்களுக்கு இந்த படம் கனெக்ட் ஆகும்.

இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பல வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்? இதனால் இந்த படம் அவர்களால் ரசிக்க முடியாமல் இருக்கலாம்." என்றார். இவரது பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஷாருக் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் RAW தொடர்பானது. அதற்காக அவை மட்டும் மக்களுக்கு புரியுமா? என்று ரசிகர்கள் பலரும் இவரது கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், ஒரு படம் மக்களுக்கு கனெக்ட் ஆனால்தான் அவர்களால் அதனை ரசிக்க முடியும். அப்படி இல்லையென்றால், படத்தின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் அவரது கருத்துக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். எனினும் இவரது இந்த பேச்சு தற்போது பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த், வார், பதான், பாங்க் பாங்க் உள்ளிட்ட சில ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Fact Check: மத மோதலாக உருவாகும் பூனம் பாண்டே இறப்பு விவகாரம் ? - பின்னணி என்ன ?