Cinema

சாலையில் எலுமிச்சம் பழத்தை நசுக்கிய நபர்.. சூனியம் செய்வதாக அடித்து தாக்கப்பட்ட பரிதாபம்.. பின்னணி என்ன ?

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அமைந்துள்ள ஹோஸ்கோட்டில் இருக்கிறது சுலிபெலே என்ற சாலை. இங்கு அப்துல் காதீர் (51) என்ற நபர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு நீரிழிவு நோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் ஒரு காதில் கேட்கும் செவித்திறனும் இழக்க நேரிட்டது.

அதோடு அவரது கால் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், அவரது உடலில் உள்ள நோய் சரியானபாடில்லை. இந்த சூழலில் அவர் இறை நம்பிக்கையை நோக்கி முழுமையாக நகர்ந்தார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கபள்ளாப்பூர் பகுதியின் சிந்தாமணியில் உள்ள தர்கா ஒன்றுக்கு தனது குடும்பத்தோடு சென்றுள்ளார். அங்கே இருக்கும் ஆன்மிகத் தலைவரிடம் தனது நோய் குறித்து கூறி, தீர்வு கேட்டுள்ளார். அப்போது அவரோ ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்து, அதனை 3 மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் வைத்து, காலால் நசுக்கும்படி கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் உடலில் உள்ள நோய் குணமாகும் என்றும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட காதீரும், அதன்படி செய்ய எண்ணி, தனது குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார். அப்போது மனைவி மற்றும் மகனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, காதீர், தனது தாயை காண தேவனஹள்ளி பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சிறிது தூரம் நடந்து சென்றபோது, 3 சாலைகள் சந்திக்கும் இடம் ஒன்று வந்துள்ளது.

இதனை கண்ட காதீரோ, தான் பெற்று வந்த எலுமிச்சை பழத்தை கீழே போட்டு தனது காலால் நசுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் இதனை கண்ட அருகில் இருந்த பெண், அவரது கணவர், மைத்துனர் ஆகியோர் வந்து காதீரை வசைபாடியுள்ளனர். மேலும் அவர் சூனியம் வைப்பதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். தான் அவ்வாறு செய்யவில்லை என்று எவ்வளவு கூறியும், அதனை செவி மடுக்காத அந்த கும்பல் அவரது கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி, கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளது.

மேலும் அவரை காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் அவரது குடும்பத்துக்கு தெரியவரவே, விரைந்து வந்து விவகாரத்தை கூறி அவரை மீட்டுள்ளனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த அவர், வீடு திரும்பிய கையோடு, இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காதீரை தாக்கிய வழக்கில் ரியாஸ், அவரின் மனைவி சாதிக், அஞ்சினப்பா ஆகியோரை கைது செய்தனர். தற்போது அவர்களும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். உடல் நிலை பிரச்னை காரணமாக பரிகாரம் செய்வதுபோல், எலுமிச்சம் பழத்தை காலில் நசுக்கியவர், சூனியம் வைத்ததாக கூறி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஐஸ்வர்யா ராய் குறித்த அவதூறு கருத்து - பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பாக். முன்னாள் வீரர் ! பின்னணி என்ன ?