Cinema

அதிமுக ஆட்சியில் மாநிலத்தையே உலுக்கிய சம்பவம் : திரைப்படமாகும் வாச்சாத்தி வன்கொடுமை - இயக்குநர் யார் ?

தர்மபுரி மாவட்டத்தின் கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில், கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, சந்தனமரம் வெட்டி, கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய குழுவினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த பெண்கள் மீது வன்முறை ரீதியாக பல கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர் அரசு அதிகாரிகள். மேலும் பெண்களிடம் அத்துமீறல், பாலியல் வன்கொடுமை செய்தும் துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியோடு, 90 பெண்கள் உள்ளிட்ட 133 பேர் கைது செய்யப்பட்டும், கிராம மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது, 18 மலை வாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் அப்போதைய அதிமுக அரசு இதனை முறையாக விசாரிக்காமல் இருந்து வந்ததால், இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது, அதில் வனத்துறையை சேர்ந்த 155 பேர், காவல்துறையை சேர்ந்த 108 பேர், வருவாய்த்துறையினர் 6 பேர் என 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 2011-ல் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில், தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இதனை விசாரித்த நீதிபதி சம்பவத்தில் தொடர்புடைய பகுதியாக கருதப்படும் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரிடையாக சென்று மக்களை சந்தித்து வழக்கு தொடர்பாக கேட்டறிந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கடந்த செப் 29-ம் தேதி தீர்ப்பளித்தார்.

அதன்படி, வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

5 லட்ச ரூபாயை குற்றம் புரிந்தவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர், அப்போதைய எஸ்.பி., மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கு தற்போது திரைப்படமாக ஆகவுள்ளது. இந்த படத்தை பிரபல திரைக்கலைஞர், நடிகை ரோகினி இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு இந்த படத்திற்கு ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

ஏற்கனவே ஜெய் பீம் என்ற படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டு வெற்றிப்படமாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படமும் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக பார்க்கப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. லியோவுடன் களமிறங்கும் பெரிய தலைகளின் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ !