Cinema

23வயதில் வீட்டை விட்டு வெளியேற்றம்-இயக்குநர், நடிகர், நாத்திகவாதி: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறுபக்கம்

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை அடுத்துள்ள பசுமலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து. தனது 23 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், சென்னை வந்தார். சென்னையில் வாழ வேண்டும் என்பதற்காக ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றினார். ஒரு கட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் அறிமுகம் கிடைக்க, அவர் மூலமே திரையுலகில் இவர் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் உதவி இயக்குநராக ராஜ்கிரணின் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இவர், பின்னர் மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களுடனும் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து ஒரு படி மேலே போய், சிம்புவின் மன்மதன் படம் மூலம் இணை இயக்குநராக ஆனார்.

இதனிடையே அஜித்தின் வாலி படத்தில் அறிமுகமான இவர், விஜயின் உதயா உள்ளிட்ட படங்களிலும் சிறு காதாபாத்திரத்தில் நடித்தார். இயக்கத்தில் பெரும் ஆர்வம் கொண்ட இவர், 2008-ல் வெளியான பிரசன்னா, உதயதாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு பெரிய அளவு கை கொடுக்கவில்லை என்றாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014-ல் விமல், பிரசன்னா, ஓவியா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'புலிவால்' படத்தை இயங்கினார். அந்த படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் தொடர்ந்து நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்ட தொடங்கினார்

ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், சுல்தான், விஷாலின் சண்டைக்கோழி 2, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், டாக்டர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகிக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

இந்த படத்தின் பிரஸ் மீட்டிங்கின் போது இந்த படத்தில் கதாநாயகனுக்கு தந்தை கதாபாத்திரத்தில் நிர்வாணமாக ஓடி நடித்த தங்கராஜ் அவர்களின் காலில் அனைவரின் முன்பு விழுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து இப்படியே படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதோடு கமல் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதனிடையே சின்னத்திரையில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்த இவருக்கு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' தொடரில் மூலம் சீரியலில் அறிமுகம் கிடைத்தது.

அதுநாள் வரை திரையில் தோன்றிய இவர், 2022-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வீட்டிலுள்ள தொலைக்காட்சிகளும் தோன்ற தொடங்கினார். இந்த தொடரில் ஆண்டிமுத்து குணசேகரன் (AGS) என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவராக மாறினார். இதில் பெண்களை திட்டி அடக்குமுறை படுத்தும் கதாபாத்திரமான இவருக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளனர் .

"ய்யேப்பா யேய்" என்ற இவரது வசனம் மீம்களில் எல்லாம் உலா வருகிறது. அண்மையில் இவர் சமூக வலைதளங்ளில் ட்ரெண்டிங்கில் இருந்தார். இவரது கதாபாத்திரமானது மக்கள் மத்தியில் என்றும் அழியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்த சீரியலில் இவருக்கு இருக்கும் கதாபாத்திரத்திற்கும் இவருக்கும் நிஜத்தில் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது.

ஒரு நாத்திகவாதியான இவர், கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். மேலும் மூட நம்பிக்கைக்கு எதிராக இருக்கும் இவர், அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷோவில் ஜாதகத்துக்கு எதிராகவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பேசியிருப்பார். அதோடு இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அந்த பிள்ளைகளை இவர் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக வளர்த்து வந்ததாக பேட்டி ஒன்றில் இவர் தெரிவித்திருந்தார்.

இப்படி வெள்ளித்திரை முதல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை எதிர் நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு தனது 57-வது வயதில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் இருந்து அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் இவரது உடல், இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இவரது மறைவு தமிழ் சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக உள்ளது.

Also Read: மாரிமுத்து TO குணசேகரன்.. டப்பிங் போது மாரடைப்பு.. பிரபல நடிகர் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்