Cinema

ஸ்டூடியோவில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பிரபல கலை இயக்குநர்.. திரையுலகம் அதிர்ச்சி !

சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கலை இயக்குநர்கள். இதில் பாலிவுட்டின் முக்கிய கலை இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நிதின் தேசாய். தற்போது 57 வயதுடைய இவர் பாலிவுட்டின் முக்கிய படங்களான லகான்,Once Upon a Time in Mumbai உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மேலும் ஜோதா அக்பர், பாஜிராவ் மஸ்தானி என வரலாற்று தொடர்பான உருவாக்கங்களிலும் பணியாற்றியுள்ளார். சிறந்த கலை இயக்குநருக்கு 4 முறை தேசிய விருதையும் பெற்றுள்ள இவர், கடந்த 2019-ல் Ashutosh Gowarikar என்ற இயக்குநருடன் இறுதியாக பணியாற்றினார்.

கலை பள்ளியில் பயிற்சியை முடித்த இவர், 1987-ம் ஆண்டு முதல் தனது கலை பயணத்தை கலை இயக்குநராக தொடங்கினார். இப்படி சினிமாவில் நாளடைவில் இவருக்கு ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாக கடந்த 2005-ம் ஆண்டு என். டி. ஸ்டுடியோ என்ற ஒன்றை தொடங்கினார். இந்த ஸ்டுடியோ கர்ஜத் (Karjat) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவருக்கு பலரும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

இந்தி மட்டுமின்றி, மராத்தி, சீரியல்கள் என பலவற்றிலும் இவர் இயக்குநராக பணியாற்றியுள்ளார். முக்கிய கலை இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் இவர், கடந்த சில காலமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும் அவரது என். டி. ஸ்டுடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் தீ விபத்து ஏற்பட்டு செட் பலத்த சேதமடைந்ததால் அவர் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பெரும் உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது என். டி. ஸ்டுடியோவில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை விவகாரம் அறிந்த அங்கிருந்த ஒருவர் போலீஸ் மற்றும் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது மறைவுக்கு திரையுலகம், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: மாமன்னன் : “இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை..” - 1 மாதம் கழித்து Review சொன்ன லோகேஷ் கனகராஜ் !