Cinema

மர்மமான முறையில் கழிவறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. போலிஸார் விசாரணை !

உத்தரகாண்டை சேர்ந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத். 32 வயதாகும் இவர் பிரபல மாடல் ஆவார். தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகமும் செய்து வைத்துள்ளார்.

மேலும் 300-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். இப்படி திரைத்துறையில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர், Splitsvilla 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். இது தவிர, ஆதித்யா லவ், ஆஷிகி, கோட் ரெட், ஆவாஸ் சீசன் 9, பேட் பாய் சீசன் 4 மற்றும் பிற டிவி நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார். தற்போது மும்பையில் வசித்து வரும் ஆதித்யாவுக்கு போதை பொருள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அவரது அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆதித்யாவின் நண்பர் வந்து பார்த்துள்ளார். அப்போது ஆதித்யா கழிவறையில் மூச்சு பேச்சு இன்றி இருந்துள்ளார். இதனை கண்டு பதற்றமடிந் நண்பர், உடனே அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதித்யா மரணத்துக்கு போதை மருந்துதான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் அவரது இறப்பு குறித்த காரணங்கள் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகே தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கழிவறையில் மர்மமான முறையில் பிரபல நடிகர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கல்லீரல், நுரையிரல், சிறுநீரகம் செயலிழப்பு ? - தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் சரத் பாபு உயிரிழப்பு !