Cinema

5 நாளில் மஞ்சிமாவுடன் திருமணம்.. “என் அப்பா சொன்ன ஒரு வார்த்தை தான்..” - கெளதம் கார்த்திக் Open Talk !

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் GVM இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' திரைப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் ஜோடியாக நடித்த இந்த படம் வெளியான போதே, இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருமே தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தங்களது காதலை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணமும் எப்போது நடைபெறும் என்று எழுந்த ரசிகர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தங்களது திருமணம் வரும் நவம்பர் 28-ம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

தொடர்ந்து கெளதம் கார்த்திக் பேசுகையில், "எங்களது திருமணத்திற்கு உங்களின் ஆசீர்வாதம் தேவை. எங்களது திருமணம் சிறிய அளவில் குடும்ப நிகழ்வாக நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்போம்.

எங்கள் காதல் பெரிய கதையெல்லாம் ஒன்றுமில்லை. முதலில் நான் தான் காதலை சொன்னேன். அதன்பிறகு இரண்டு நாள் கழித்துதான் மஞ்சிமா ஒத்துக்கொண்டார். அந்த இரண்டு நாளும் எனக்கு பயம் அதிகமாக இருந்தது. பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

சரியான நபரை உன் வாழ்க்கையில் சந்தித்தால் வாழ்க்கை முழுமையடையும் என அப்பா கூறுவார். அப்படி நான் சந்தித்த நபர் தான் மஞ்சிமா. தேவராட்டம் படத்தின் போது நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு எங்களின் நட்பு ஒரு வருடத்திற்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதை விட நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் என்னை உற்சாகமூட்டுவார் என்று தான் எனக்கு காதல் ஏற்பட்டது" என்றார்.

Also Read: “வில்லனாக நடிச்சதால தான் எனக்கு இந்த நிலைமையோனு தோணுது” -உடல் நலம் குறித்து நடிகர் வேணு அரவிந்த் குமுறல்!