Cinema

"என் அப்பா அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.." - மாஸ் Update கொடுத்த ராஜமெளலி !

பிரம்மாண்ட ஹிட் கொடுத்த RRR படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண் அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்தாண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்து திரையிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். சிகாகோவில் நேற்று RRR படத்தின் சிறப்பு காட்சியில் ராஜமௌலி விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "எனது அனைத்து படங்களுக்கும் என் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையாசிரியர். RRR படத்தின் ஹிட்டுக்கு பிறகும் எங்களுக்குள் விவாதங்கள் நடந்தது. அப்படியே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் எனவும் முடிவு செய்தோம். தற்போது இந்த கதையின் தொடர்ச்சிக்கான கதையை தயார் செய்யும் பணியில் என் தந்தை ஈடுபட்டு வருகிறார்" என்றார்.

RRR படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை அதன் இயக்குநர் தெரிவித்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை அவர் தெரிவிக்கவில்லை. விரைவில் இதன் கதையை முடித்து, பிறகு இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மணிரத்னம் பட நாயகன்கள், GVM பட நாயகிகளை காதலித்தால் நிலைமை என்னவாயிருக்கும்? ஒரு பார்வை